(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்ட மூலம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சில திருத்தங்களை தயாரித்துள்ளது. அவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாயின் வாக்கெடுப்பு தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கொவிட் நிலைமையைக் கருத்திற்கொண்டு துறைமுக நகர சட்ட மூலம் மீதான விவாதத்தை ஒரு வாரமேனும் ஒத்திவைக்குமாறு ஆளுந்தரப்பிடம் கோரினோம். எனினும் அந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அவசரமாக 19, 20 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இந்த சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய பல உறுப்புரைகள் உள்ளன. அவ்வாறு முன்னெடுக்கக்கூடிய திருத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துள்ளது. இதனை அரசாங்கத்திடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளோம்.
எம்மால் முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு சட்ட மூலத்தில் அந்த திருத்தங்களை அரசாங்கம் ஏற்படுத்துமாயின் வாக்கெடுப்பு தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டத்தில் அவதானம் செலுத்துவோம்.
ஆனால் இந்த அரசாங்கம் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. எனவே இதனை பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்குள் உட்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு துறைமுக நகர நிதி விவகாரங்கள் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் சீனி இறக்குமதி வரி மோசடி என்பன இவற்றின் மூலமாகவே பகிரங்கப்படுத்தப்பட்டன. எனவே துறைமுக நகரும் பாராளுமன்ற அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டால் அதில் இடம்பெறும் மோசடிகளையும் தடுக்க முடியும் என்றார்.

No comments:
Post a Comment