வட மாகாணத்தில் உயரதிகாரிகளினால் சித்த மருத்துவ அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டு வருவதாக அரச சித்தமருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் இயங்கி வரும் சுதேச மருத்துவ திணைக்களத்தின் அபிவிருத்தி ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
அதாவது கடந்த 15 வருடங்களை கடந்தும் சுதேச மருத்துவ திணைக்களத்திற்கென தனியான காணி ஒதுக்கீடுகளோ நிரந்தர கட்டடங்களோ ஏதும் இன்றி காலத்திற்குகாலம் இடமாற்றப்பட்டு தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றது.
அவ்வாறே சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய சித்த மருந்தகம், கிராமிய சித்த மருத்துவமனை, மாவட்ட சித்த மருத்துவமனை, மருந்து உற்பத்தி பிரிவு, மூலிகை தோட்டங்கள், மாகாண மூலிகை கிராமம், சமூக மருத்துவ பிரிவு என்பன அடிப்படை வசதிகளோ நிரற்படுத்தப்பட்ட ஆளணியினரோ இன்றி காணப்படுவதுடன் இவற்றில் சில இடவசதிகளின்றி தனியார் கட்டடங்களில் பல இடையூறுகளுக்கு மத்தியில் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவையாற்றி வருகின்றன.
இவ்வாறான செயல்களை வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் பணிமனையும், சுகாதார சுதேச மருத்துவ அமைச்சும், சுதேச மருத்துவ திணைக்களமும், பாராமுகமாக இருப்பது எமது சங்கம் ஆழ்ந்த மனவேதனையினை அடைகின்றது.
மேலும் சித்த மருத்துவத்தினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் பிரமுகர்கள், இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவர்கள், உயரதிகாரிகள், சித்த மருத்துவ விரிவுரையாளர்கள் சித்த மருத்துவ நிபுணர்கள், சித்த மருத்துவர்கள் ஆகியோர்கள் மட்டும் அல்லாது ஒவ்வொரு தமிழ் மகனும் முன்வர வேண்டும் என அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
வேகமாக பரவி வரும் COVID-19 பரவலைத் தடுப்பதற்கு COVID-19 தொடர்பாக இராஜங்க அமைச்சர் சுதர்சினி பெனாண்டோ பிள்ளை ஆயுள்வேத வைத்தியசாலைகளை COVID-19 இற்காக சிகிச்சை நிலையங்களாக மாற்றி அமைக்க கேட்டுக்கொண்ட போதும் வடக்கு மாகாணத்தில் அதற்கான நடவடிக்கைகள் வட மாகாண ஆளுநரோ, சுகாதார சுதேச மருத்துவ அமைச்சோ, மேற்கொள்ளாமை அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு இவற்றை ஆரம்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். என்றுள்ளது
No comments:
Post a Comment