(ஆர்.ராம்)
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனம் அனுப்பி வைத்துள்ள பதிலை நினைத்து அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன தெரிவித்துள்ளன.
அதேநேரம், இலங்கை அரசாங்கம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை எந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்குமாறு பரிந்துரைத்தது என்பதும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களில் ஆறு இலட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை கொள்வனவு செய்வற்கு அரசாங்கம் பலவழிகளை முன்னெடுத்து, அதனடிப்படையில் தற்போது தனியார் துறையொன்று கொள்வுனவு செய்வதற்கு அரசாங்கமே பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், 5.5 டொலர்கள் பெறுமதியிலேயே முதலில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பெறுமதி காணப்பட்டதாகவும் அதனை 15 டொலர்கள் வரையிலான பெறுமதியில் தனியார் துறையினர் ஊடாக கொள்வனவு செய்வதற்க முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ரஜித சேனாரத்ன கருத்து வெளியிடுகையில், இலங்கை அரசாங்கம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனத்திற்கு பரிந்துரைத்த தனியார் நிறுவனங்கள் எவை என்பதை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன் அரசாங்கத்தின் எந்த நபர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பதையும் பகிரங்கமாக கூற வேண்டும்.
இதில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகையில், இலங்கை அரசாங்கமானது தனியார் துறைக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வழங்குமாறு பரிந்துரைத்து அணுகுமுறைகளைச் செய்துள்ளது. இதனையடுத்து அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனமானது இலங்கை அரசாங்கத்திற்கு உரிய பதிலடியை வழங்கியுள்ளது.
அரசாங்கங்களுக்கும், உலக சுகாதார நிறுவனங்களுக்கும் மட்டுமே தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனம் கடிதம் மூலம் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனத்தின் பதிலளிப்பால் இலங்கை அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். இத்தனை நெருக்கடியிலும் தம்முறை சகபாடிகள் உள்ள தனியார் துறையை மையப்படுத்தி அரசாங்கம் செயற்பட முனைவதானது மிக மோசமான செயற்பாடாகும் என்றார்.
இதேவேளை, அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தம்மால் தனியார் துறைக்கு தடுப்பூசிகளை வழங்க முடியாது என்றும், யுனிசெப், கோவெக்ஸ் தடுப்பூசித் திட்டம் மற்றும் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இந்தியாவின் சேரம் நிறுவனம் ஆகியவற்றினூடாக மட்டுமே இலங்கைக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அஸ்ட்ராசெனெகா நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment