கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரம் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வியலிலும் சிறந்த பொருளாதார ரீதியான மாற்றங்களை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாரம்பரிய கடற்றொழில் முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் உத்தரவாதமளித்தார்.
அரியாலை பிரதேசத்திற்கு இன்று (28.05.2021) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குய்லான் கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்டதுடன், கடலட்டை குஞ்சுகளின் உத்தியை அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, யாழ். அரியாலைப் பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்ற கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரியாலை பிரதேசத்தில் கடலட்டை பண்ணையை உருவாக்குவதற்கு பொருத்தமான இடங்களைப் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலே அக்கறையாக உள்ளதாகவும். அதற்காக கிடைக்கின்ற வளங்களையும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தவதில் முழு அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடற்றொழிலாளர்களின் நலன்கருதி பெரும் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய கடலட்டை வளர்ப்பு பண்ணைகளை பொருத்தமான இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மற்றும் பிரதமரின ஒத்துழைப்புடன் குறித்த திட்டம் வெற்றியடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, கடலட்டை பண்ணைகளை அமைப்பதனால் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலரிடம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், எமது கடற்றொழிலாளர்களின் நலன்களும் விருப்பங்களும் பாதிக்கப்படுவதையோ, அது தொடர்பான நடவடிக்கைகளையோ ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment