(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் செயற்பாடுகளில் இலங்கை தொடர்ந்தும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது எதிர்கொண்டுள்ள மனித உரிமை மீறல் நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, உயர்மட்ட வெளிவிவகாரக் கொள்கையின் ஓரங்கமாக, ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் செயற்பாடுகளில் பங்களிப்பை வழங்குவதற்கு 2015 - 2019 வரையில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் தீர்மானித்தது.
அல்கைதாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுக்களை எதிர்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியின் பிரிவொன்று எம்.ஐ - 17 ஹெலிகொப்டருடன் மாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே எதிர்வரும் காலங்களிலும் இத்தகைய நடவடிக்கைகளில் இலங்கை பங்களிப்பு வழங்க முடியும் என்பதுடன், அவை வலுவிழக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலை மற்றும் மூலதனத்தேவை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, ரஷ்யாவின் ஏற்றுமதிக் கடன் மார்க்கத்தின் ஊடாகவே ஹெலிகொப்டரை கொள்வனவு செய்ய வேண்டும்.
அதேபோன்று இத்தகைய கட்டமைப்புக்களில் எமது பங்களிப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டுமெனின், தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொண்டுள்ள மனித உரிமை மீறல் நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment