(எம்.எப்.எம்.பஸீர்)
கம்பஹா, திவுலபிட்டிய சுகாதார வைத்திய அதிகார எல்லைக்குட்பட்ட கொட்டதெனியாவ - கரபொட்டுவெவ பகுதியில் அமைந்துள்ள இந்திய இரும்பு தொழிற்சாலையில் சேவையாற்றும் இரு இந்திய ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (05.05.2021) வெளியான பி.சி.ஆர். பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக திவுலபிட்டிய பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஆ.யு.டி.குலதிலக தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த இரு இந்திய ஊழியர்களையும், அந்த தொழிற்சாலைக்குள்ளேயே தனிமைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, தற்போது இந்தியாவில் பரவி வரும் வைரஸ் தொற்றா என ஆராயுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் திவுலபிட்டிய பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஆ.யு.டி.குலதிலக தெரிவித்தார்.
தற்போது பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இரு இந்தியர்களும் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதியே இலங்கை வந்துள்ளனர்.
அவர்களுடன் மேலும் 8 பேர் இலங்கை வந்துள்ளதுடன், அந்த 8 பேரும் அவர்களது தொடர்பு வட்டத்துக்கு உட்பட்டோரும் தனியாக தொறிசாலைக்குள் வேறு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக திவுலபிட்டி சுகாதார பரிசோதகர் பணிமனை தகவல்கள் தெரிவித்தன.
குறித்த தொழிற்சாலையில் 67 இந்திய ஊழியர்களும் 184 இலங்கையர்களும் வேலை செய்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment