நைஜீரியாவில் பொலிஸ் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் - 7 பேர் சுட்டுக் கொலை - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

நைஜீரியாவில் பொலிஸ் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் - 7 பேர் சுட்டுக் கொலை

நைஜீரியாவில் ராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.‌ இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நைஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வளமிக்க மாகாணமான ரிவர்ஸ் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை அரங்கேற்றினர். 

நேற்றுமுன்தினம் இரவு ரிவர்ஸ் மாகாணத்தின் சோபா நகரில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு வேனில் வந்த பயங்கரவாதிகள் அங்கு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 2 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதன் பின்னர் அங்கிருந்து வேனில் தப்பிச் சென்ற பயங்கரவாதிகள் வழியில் உள்ள ஒரு பொலிஸ் நிலையம் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தையும் தீ வைத்து எரித்தனர்.‌ இந்த கோர சம்பவத்தில் 2 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

அதன் பின்னர் அருகில் உள்ள ஒரு மற்றொரு பொலிஸ் நிலையத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 

அதேசமயம் பொலிஸாரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment