(செ.தேன்மொழி)
கொழும்பு - புளுமெண்டல் பகுதியில் பெருந்தொகையான போதைப் பொருட்கள் மற்றும் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் கிம்புலாஹெலே குணாவின் சகா கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பு - புளுமெண்டல் பகுதியில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
23 வயதுடைய இளைஞனிடமிருந்து 2 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளுக்கமைய, கஞ்சா போதைப் பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஹேஸ் வகை போதைப் பொருள் 4.5 கிலோ கிராம், 4 இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு குற்றச் செயற்பாடுகளை புரிந்து இந்தியாவிற்கு தற்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் கிம்புலாஹெலே குணா மற்றும் அவரது சகோதரன் சுரேஸ் ஆகியோரின் வழிநடத்தலின் கீழே இந்த போதைப் பொருள் கடத்தல் இடம்பெற்று வருவதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியுடவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment