பிரேஸிலில் போதைப் பொருள் கடத்தர்காரர்களை குறிவைத்து ரியோ டி ஜெனிரோவின் மிகப்பெரிய சேரி பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது நகர வரலாற்றில் பதிவான மிகக் கொடூரமான சோதனை நடவடிக்கை ஆகும்.
ரியோவின் சிவில் காவல்துறையின் சுமார் 200 உறுப்பினர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் குறித்த பகுதிக்குள் நுழைந்து போதைப் பொருள் கடத்தல் காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதன்போது மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் தோட்டாக்களால் தாக்கப்பட்டாலும் உயிர் தப்பினர்.
ரியோவில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவென பிரேஸில் பொலிஸ்மா அதிபர் ரொனால்டோ ஒலிவேரா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த சோதனையில் குறிவைக்கப்பட்ட கும்பல் போதைப் பொருள் கடத்தல், மோசடி, கொலைகள் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்று அந்நாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இறந்தவர்களில் ஆதிக்கம் செலுத்திய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்களும் இருப்பதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது. 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை மாநிலங்களில் ஒன்றாகும், மேலும் பரந்த பகுதிகள் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவற்றில் பல சக்தி வாய்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
பிரேஸிலில் பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் முக்கிய நகரங்களில் குற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு எதிராக அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, தொற்று நோய்களின் போது ரியோவின் வரிய பகுதிகளில் பொலிஸ் நடவடிக்கையை தடை செய்தது.
No comments:
Post a Comment