(செ.தேன்மொழி)
தொற்று நோய்கள் தொடர்பில் எமக்கு ஆரம்பகால அனுபவங்கள் உள்ளது. எனினும் கொவிட்-19 வைரஸ் பரவலின் முதலாம் அலை முடிவின்போது, மக்கள் அதனை கொண்டாடும் வகையில் விநோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக இரண்டாவது அலை அதனையும் விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பொது சுகாதார சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளர் விசேட வைத்தி நிபுணர் லக்ஷ்மி சுமுது தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, இந்நிலையில் இந்த வைரஸ் காற்றின் மூலமே பரவலடைகின்றது என்பது தற்போது அனைவரும் அறிந்ததே. நாம் எமது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடி வைத்திருக்கும் போது வைரஸ் எம்மை தாக்காது. அதனால் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள்.
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, குடும்பத்தினருடன் மாத்திரம் இணைந்து கொண்டாடுவது மிகவும் பாதுகாப்பானதாகும். சில நிகழ்வுகளை வழமைப்போன்று கொண்டாட முடியாது. இதன்போது சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
வைரஸ் பரவல் தொடர்பில் நேர்முக மற்றும் மறைமுகமான விடயங்கள் பல உள்ளன. ஆனால் பாதகமான விடயங்கள் மாத்திரமே பேசப்படுகின்றது.
வைரஸ் தொற்று காரணமாக 500 பேர் வரை உயிரிழந்திருந்தாலும், 89 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். அது தொடர்பில் பேசப்படுவதில்லை. இந்த சந்தர்ப்பத்திலும் சில நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் அந்த நிலைமை இல்லை.
வைரஸ் தொற்றை இன்னொருவருக்கு பரப்பக்கூடாது என்பதிலும், இன்னுமொருவரிடமிருந்து ரைவஸ் தொற்றை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலும் நாம் தெளிவான இருக்க வேண்டும்.
வைரஸ் பரவலை இல்லாதொழிக்க தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றாலும், கிடைக்கா விட்டாலும் நாம் உரிய சுகாதார சட்ட விதிகளை கடைப்பிடித்தால் வைரஸ் பரவலை வெற்றிக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment