மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அஜித் பி பெரேரா - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அஜித் பி பெரேரா

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஏனைய நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களை கொலை செய்து, பாதுகாப்பை சீர்குழைத்து அரசியல் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முற்பட்டவர்களே இதனை செய்துள்ளனர் என்பது தற்போது தௌவாகியுள்ளது. அவ்வாறான நபர்கள் யார் என்பது தொடர்பில் ஆராய்ந்து, நியாயம் வழங்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஏனைய நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும் அதற்கான நடவடிக்கை இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையில் முன்னாள் பிரதமரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு அதிகாரமும் ஐக்கிய தேசிய கட்சியிடம் காணப்படவில்லை. சகல அதிகாரங்களும் பதவிகளும் முன்னாள் ஜனாதிபதியிடமே காணப்பட்டன. எனவே ஐக்கிய தேசிய கட்சி பொறுப்பு கூறும் நிலை ஏற்படாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு பிரதிவாதிகளுக்கு எதிராகவும் இதுவரையில் இலங்கையில் வழக்கு தொடரப்படவில்லை. எனினும் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆணைக்குழுவினாலும் அது முடியாமல் போயுள்ளது என்றார்.

No comments:

Post a Comment