கொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றி கொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது. அதேபோன்று நாட்டின் நலனுக்காக நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட இந்நாளில் பிராத்திப்போம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சபாநாயகர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலரவிருக்கும் புத்தாண்டு இலங்கையர்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்த கலாசார பண்டிகையாகும். இது நாம் கலாசாரம் மிக்க மனிதர்கள் என்ற ரீதியில் பல்லாயிரம் வருடங்களாக நமக்கிடையில் பேணிவரும் பிணைப்பிற்கான சான்றாகும்.
ஒவ்வொரு புத்தாண்டிலும் போன்று இவ்வருடமும் ஒரே நாடாக ஒரே தருணத்தில் முன்னெடுக்கும் சடங்குகள் நமது ஒற்றுமைக்கு ஒரு சான்றாகும். இந்த சடங்குகளை நிறைவேற்றும் எம் அனைவரினதும் ஒரே பிரார்த்தனை நிலைபேறான சுபீட்சமாகும். இதனை வெறும் பிரார்த்தனையாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் புத்தாண்டின் பின்னரும் நாம் அனைவரும் நாட்டுக்காக உழைக்க திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள், விரக்திகள் இலகுவில் மறக்க முடியாதவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
எனினும், கொவிட்-19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றி கொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது. அவ்வாறான உலகளாவிய பிரச்சினை மூலம் ஒற்றுமை மற்றும் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்வதன் பெறுமதி மனித குலத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்பதே எமது கருத்தாகும். இந்த சூழலும் புத்தாண்டுடன் வசந்த காலமாக மாறும்.
அதனால், ஏனையவர்களை அனுதாபத்துடன் சிந்திக்கும் ஒரு புதிய மனிதராக இந்தப் புத்தாண்டில் நாட்டின் நலனுக்காக நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட வேண்டும் என்பதே எனது புத்தாண்டின் பிரார்த்தனையாகும்.
இலங்கையர்களாகிய நாங்கள் அனைவரும் சுபீட்சமான எதிர்காலத்தை அடைய இனிய சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment