ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020ம் ஆண்டு ஜனாதிபதி காரியாலயம் மூலம் மாத்திரம் 1.7 பில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
'அநாவசியமான செலவுகளைக் குறைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடத்தில் பெருமளவு பணத்தை நாட்டிற்கு மீதப்படுத்தியுள்ளார்.
ஆட்சியிலிருந்த கடந்த ஒன்றரை வருட காலத்தில் வெளிநாட்டு பயணங்களுக்காக 32 இலட்சம் ரூபாவை மாத்திரமே ஜனாதிபதி செலவிட்டுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ம் ஆண்டு ஜனாதிபதி காரியாலய செலவாக 3.02 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி 2020ம் ஆண்டு 1.2 பில்லியன் ரூபாவையே செலவிட்டுள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் கண்டி ரோயல் கண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்ததாவது அரசியலமைப்பின் 20வது திருத்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 க்கும் அதிகமாக அதிகரிப்பார் என சிலர் கூறினார்கள். ஆனால் ஒரு அமைச்சுப் பதவியையும் அதிகரிக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்று அமைச்சர்களால் வாகனங்கள் பெற முடியாது. அது தடை செய்யப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் தலைவர்களுக்கு கடந்த அரசாங்கம் மில்லியனளவில் சம்பளம் வழங்கியது. டெலிகொம் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருக்கு 42 இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்தவொரு நிறுவனத்தின் தலைவருக்கும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்க வேண்டாமெனக் கூறியுள்ளார். அவர் இதனை விளம்பரத்துக்காக செயயவில்லை. கடந்த ஒன்றரை வருட காலத்தில் ஜனாதிபதி என்ன செய்தார் எனக் கேட்பவர்களுக்கு இவற்றை ஞாபகப்படுத்த வேண்டும்.
பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.
கொவிட் 19 தொற்று காரணமாக இன்று சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. வெளிநாட்டு பணியாளர்கள் மூலம் அந்நிய செலாவணி நாட்டுக்கு கிடைப்பதில்லை. முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்புவதில்லை. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தை அவ்வாறே செயல்படுத்தி வருகின்றார்.
ஒரு இலட்சம் கிலோ மீற்றர் பாதை காபட் இடப்பட்டுள்ளது. 60,000 பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சார்பு பொருளாதாரத்திலிருந்து விடுபட்டு உற்பத்தி பொருளாதாரத்தை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
கிழங்கு, மிளகாய், பெரிய வெங்காயம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு வருடமொன்றுக்கு 250 பில்லியன் ரூபா செலவாகின்றது. பால்மாவை இறக்குமதி செய்ய நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டொலர் தேவைப்படுகிறது. எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் நாம் பாலுற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும்". இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, அனுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பிளர் சட்டத்தரணி வசந்த யாபா பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரத்ன, செயலாளர் அதுலத் வில்வா, கண்டி அமைப்பின் செயலாளர் ஜானக சகலசுரிய ஆகியோரும் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment