தொல்பொருள் ஆய்வுக்குழு ஒன்று, உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரைக் கண்டுபிடித்துள்ளது. அந்த எகிப்திய நகர், லக்ஸோரின் மேற்குப் பகுதியில் உள்ள மணலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது.
தி ரைஸ் ஒப் அடேன் எனப் பெயர்சூட்டப்பட்ட அது, சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நகரின் வீதியோரங்களில் வீடுகள் நிறைய இருந்தன. பழுதடையாத சுவர்களுடன், 10 அடி உயரமுள்ள அறைகளைக் கொண்ட அந்த வீடுகளில், தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களும் இருந்தன.
புதைந்த நகரில் நேற்று விட்டுப்போனது போல், பழுதடையாமல் உள்ள பொருட்களைப் பற்றி ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
ஆய்வுக் குழுவினர் ‘பேக்கரி’ ஒன்றையும் கண்டுபிடித்தனர். அதில் அடுப்பு, உணவைப் பதப்படுத்தும் இடம் போன்றவற்றையும் கண்டனர்.
கடை பெரிதாக இருந்ததால், அது அதிகமான ஊழியர்களுடன் செயல்பட்டு, பல வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வந்ததாக நம்பப்படுகிறது.
இன்னொரு பகுதியில், ஒருவரின் எலும்புக்கூடு காணப்பட்டது. எலும்புக்கூட்டின் கைப்பகுதிகள் விரிந்திருந்ததாகவும், அதன் முட்டுக்கால் பகுதி கயிற்றால் கட்டப்பட்டிருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறினர்.
காணாமற்போன பழமையான நகரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் பழங்கால எகிப்தியர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதைக் கண்டறியலாம் என்று கூறப்பட்டது.
கி.மு 1391 தொடக்கம் 1353 ஆம் ஆண்டில் ஆட்சி புரிந்த எகிப்தின் பலம்மிக்க பாரோக்களில் ஒருவரான மூன்றாவது அமென்ஹொடப் காலத்தை சேர்ந்ததாக இந்த நகர் உள்ளது.
No comments:
Post a Comment