மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வீடொன்றை கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும்போது மீட்கப்பட்ட புராதன பெறுமதி வாய்ந்த நாணயங்கள் அநுராதபுர யுகத்தின் இறுதிக் காலத்தில் அல்லது பொலனறுவை யுகத்தின் ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்டவை என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வீடொன்றை கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும்போது மீட்கப்பட்ட புராதன பெறுமதி வாய்ந்த நாணயங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையியில், அநுராதபுர யுகத்தின் இறுதிக் காலத்தில் அல்லது பொலனறுவை யுகத்தின் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட 1850 புராதன நாணயங்களே மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தன.
இந்தக் காலப்பகுதியில் பல மன்னர்கள் ஆட்சி செய்தனர். முதலாவது தாதுசேனன் இரண்டாவது சேனன் நான்காவது உதய மன்னன் நான்காவது மஹிந்த மன்னர் ஆகியோரும் பொலனறுவை யுகத்தில் ஆட்சி செய்த முதலாவது விஜயபாகு மன்னன் முலாவது பராக்கிரமபாகு மற்றும் நிசங்கமல்ல போன்ற அரசர்கள் ஆட்சி செய்தனர்.
மீட்கப்பட்ட நாணயங்களில் குறிக்கப்பட்டிருந்த மீன் சின்னம் பாண்டிய மன்னர்களின் சின்னத்தை வெளிப்படுத்துவதாகவும் மற்றைய சின்னமான வாள் சின்னத்துக்குப் பதிலாக தூண் சின்னமும் காணப்படுகிறது. இந்த சின்னங்கள் தொடர்பில் கொய்ன்ஸ் அன்ட் கரன்சி என்ற புத்தகத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment