(எம்.மனோசித்ரா)
நாட்டில் பல பகுதிகளிலும் தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் அதிகளவாக தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்களாயின் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்ட நபர்களால் எவ்வித சிக்கலும் ஏற்படாது. எனினும் தொற்றுக்கு உள்ளாகி இனங்காணப்படாத நபர்களால் பாரிய அபாயம் காணப்படுகிறது.
எனவே அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினரால் எந்தளவிற்கு சட்ட விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டாலும் மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும்.
மக்களின் ஒத்துழைப்புடனும், அரசாங்கத்தினால் விதிக்கப்படுகின்ற போக்குவரத்து கட்டுப்பாடுகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மிக ஆபத்தான நிலைமையை கவனத்தில் கொண்டு அபாயத்தை உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
போக்குவரத்து சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தல், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் வெளிநாடுகளிலிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருதல் உள்ளிட்டவை தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
குறிப்பாக சுகாதார விதிமுறைகளை மீறி எவ்வித உற்சவங்களையும் நடத்துவதற்கு அனுமதியளிப்படக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment