வட மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் முழுமையான அர்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என பிரதி பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் வட மாகாண பொலிஸ் நிலையத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் தொழில் வாய்ப்பு அற்ற நிலையில் இருக்கும் தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவைக்கான ஆளணியை ஏற்படுத்தும் வகையில் வட மாகாணத்தினை பிரதித்துவபடுத்தும் கல்வி நிலை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தார்கள், இளைஞர், யுவதிகளை பிரதேச செயலகங்கள் ரீதியாக வலுவூட்டும் உத்தியோகத்தார்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கான செயலமர்வு இன்று (22) யாழ் தனியார் விடுதி யூ.எஸ். ஹோட்டலில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் ஊடாக தமிழ் மொழி இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக காணப்படுகிறது.
சுதந்திரமான ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தினையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளின் 10 ஆயிரம் இளைஞர்கள், யுவதிகளை பொலிஸில் இணைத்துக் கொண்டோம். அதனை தொடர்ந்து எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 24 ஆயிரம் நபர்களை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இதில் வட மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ, வாய் மொழி மூலமாகவோ கொண்டு வருகின்ற போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்வாறான மொழிப் பிரயோகங்களில் தவறு விடுகின்றனர்.
எனவே அவ்வாறான எண்ண நிலைப்பாட்டினை தமிழ் இளைஞர், யுவதிகள் கைகோர்க்கும் போது மாற்ற முடியும். அதுவே இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் கடமையும் ஆகும்.
இதற்கான ஒத்துழைப்பினை வழங்க வட மாகாணத்தினை பிரதித்துவப்படுத்தும் கல்வி நிலை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தார்கள், இளைஞர், யுவதிகளை பிரதேச செயலகங்கள் ரீதியாக வலுவூட்டும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்வந்து இதனை கிராம சேவையாளர்கள் ரீதியாக சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment