சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளரின் பிணை கோரும் மீளாய்வு மனு : ஆட்சேபனங்களை தெரிவிக்க ஒரு வார கால அவகாசம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளரின் பிணை கோரும் மீளாய்வு மனு : ஆட்சேபனங்களை தெரிவிக்க ஒரு வார கால அவகாசம்

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அத்திணைக்களத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரின் மீளாய்வு மனு குறித்த ஆட்சேபனங்களை எதிர்வரும் மே 5 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று சட்டமா அதிபருக்கு அறிவித்தது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அத்திணைக்களத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய மறுத்த, கம்பஹா மேல் நீதிமன்றின் தீர்மானத்தை வலு இழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனுவை இன்று 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு வந்தது.

இதன்போது ஷானி அபேசேகர சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா, தர்மஜா தர்மராஜா ஆகியோரும் மெண்டிஸ் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, ஹபீல் பாரிஸும் ஆஜராகினர்.

சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஷனில் குலரத்ன ஆஜரானார்.

இந்நிலையிலேயே இம்மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் மன்றில் சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து வழக்கினை எதிர்வரும் மே 13 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுப்பதாக அறிவித்தது.

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் கம்பஹா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த பிணை மனு கடந்த 2020 டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே, மேல் நீதிமன்றின் உத்தரவை மீளாய்வு செய்து தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஷானி அபேசேகர, சுகத் மெண்டிஸ் சார்பில் மேன் முறையீட்டு மன்றில் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment