பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால்தான் உருவானதை சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானாவின் கல்வி, சமூக, சமய, அரசியல் மற்றும் கலாசாரப் பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் தொகுக்கப்பட்ட 'அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)' நூல் சனிக்கிழமை (10) மாலை (இரவு) மருதமுனை, பொது நூலக கேட்போர் கூடத்தில் பழீல் மொலானா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் செனட்டர் மசூர் மௌலானா அரங்கில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் கூறியதாவது, கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால்தான் உருவானதை சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எமது உள்விவகாரங்களைப் பற்றி பேச வேண்டும். எமது உள்விவகாரங்களிலுள்ள விமர்சனங்களைப் பற்றிப் பேசப்போனால் எத்தனை மணித்தியாலம் எடுக்குமோ தெரியாது. அதாவது, ஏராளமான உள்முரண்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றோம்.
புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் எம்மிடையே இல்லாமல் போவதைக் காண்கின்றோம். இவ்வாறாக, தறுதலைத்தனமாக ஒரு கும்பல் செய்த செயலையே இந்த நாடு பேசிக் கொண்டிருக்கின்றது என்றார்.
இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறை முன்னாள் தலைவரும், தேசிய கல்வி நிறுவக பேரவை உறுப்பினருமான பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.முஷரப் முதுநபின், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கிப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் (நளீமி) உட்பட சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், முக்கிய கல்விமான்கள், கலை, இலக்கிய ஜாம்பவான்கள், அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானாவின் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment