தற்போதுள்ள கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் தேவைப்படும் : எனினும் மக்களின் ஒத்துழைப்புடனேயே வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

தற்போதுள்ள கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் தேவைப்படும் : எனினும் மக்களின் ஒத்துழைப்புடனேயே வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் - இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் தேவைப்படும். எவ்வாறிருப்பினும் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் அனைவருக்கும் சிகிச்சையளிக்க வைத்தியத்துறை உள்ளிட்ட தரப்புக்கள் தயாராகவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனைக்கூறிய இராணுவத்தளபதி மேலும் குறிப்பிடுகையில், நாளொன்றுக்கு 1000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது 7000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெவ்வேறு நாடுகளில் தொற்றாளர்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் தேவைப்படும். மேலும் பல தொற்றாளர்கள் அடுத்த இரு வாரங்களிலேயே இனங்காணப்படுவர்.

தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களாவர்.

தற்போதைய நிலைவரம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள், பிரதான வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்களுடன் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் சாதாரண சிகிச்சைகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே மேலும் சிகிச்சை வசதிகளை அதிகரிக்க வேண்டிய தேவையுடைய வைத்தியசாலைகள் எவை என்பது தொடர்பில் அறியத்தருமாறு குறித்த வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் அவர்களுக்கான சிகிச்சைளிக்க சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். 

செயற்திட்டங்களை எம்மால் அறிமுக்கப்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் முடியும். ஆனால் மக்களின் ஒத்துழைப்புடனேயே வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

வைத்தியசாலைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் மேலும் 10,000 சிகிச்சை படுக்கைகளை வழங்குவதற்கும் நாம் தயாராகவுள்ளோம்.

இலங்கையில் இராணுவம் உள்ளிட்ட முப்படையில் சிரேஷ்ட மருத்துவ பிரிவு காணப்படுகிறது. எனவே எவ்வாறான நெருக்கடி நிலைமை ஏற்பட்டாலும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முப்படை தயாராகவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment