(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத கால சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதன்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சட்டவிதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று புதன்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொணராகலை, திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளிலே அதிகமானவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கமைய இதுவரையில் 3900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அத்தியவசிய தேவையின்றி , அங்கிருந்து வெளியேற முடியாது. அதேபோன்று வெளி பிரதேசங்களில் இருப்பவர்கள் அந்த பகுதிகளுக்கு உட்பிரவேசிக்க முடியாது.
அவ்வாறு செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தகைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் சீருடை மற்றும் சிவில் உடையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
No comments:
Post a Comment