எத்தியோப்பியாவின் இன மோதல்களில் 200 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

எத்தியோப்பியாவின் இன மோதல்களில் 200 பேர் பலி

எத்தியோப்பியாவின் இரு பெரும் இனக் குழுக்களுக்கு இடையே அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் மோதல்களில் 200 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு தலைமை முறைகேள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வடக்கு அம்ஹாரா பிராந்தியத்தில் அம்ஹாராக்கள் மற்றும் ஒரோமோக்களுக்கு இடையிலான மோதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாக ஆரம்பகட்ட செய்திகள் தெரிவித்தன.

இந்த வன்முறைகளில் சுமார் 330,000 பேர் வரை இடம்பெயர்ந்திருப்பதாக முறைகேள் அதிகாரி என்டலே ஹெய்லே தெரிவித்தார். அடாயே என்ற சிறு நகரில் கால் பங்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் அம்ஹாரா பிராந்தியத்தில் ஒரோமோக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வார ஆரம்பத்தில் இந்த மாநிலத்தின் சில பகுதிகளில் எத்தியோப்பிய அரசு அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தது.

இந்நிலையில் நாட்டில் வரும் ஜூன் மாதம் தேர்தல் திட்டமிட்டபடி நடப்பதிலும் கேள்வி எழுந்துள்ளது. எத்தியோப்பியாவில் பல பிராந்தியங்களிலும் வன்முறை இடம்பெற்று வருவதோடு குறிப்பாக டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆறு மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

No comments:

Post a Comment