பிரான்ஸில் பாடசாலைகளுக்கு பூட்டு : மெதுவாக நடைபெறும் தடுப்பூசி போடும் பணி : வீட்டிலிருந்து 10 கிலோ மீற்றருக்கு அப்பால் பயணிக்க தடை - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

பிரான்ஸில் பாடசாலைகளுக்கு பூட்டு : மெதுவாக நடைபெறும் தடுப்பூசி போடும் பணி : வீட்டிலிருந்து 10 கிலோ மீற்றருக்கு அப்பால் பயணிக்க தடை

பிரான்ஸில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகளின் ஓர் அம்சமாக பாடசாலைகள் மூன்று வாரங்களுக்கு மூடப்படவுள்ளன.

அடுத்து வாரம் தொடக்கம் பாடசாலைகள் தொலைநிலை கற்கைக்கு மாற்றப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.

கடந்த மாத ஆரம்பத்தில் பிரான்சின் சில பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த முடக்கநிலை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை தொடக்கம் அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படுவதோடு நியாயமான காரணம் இன்றி தனது வீட்டில் இருந்து 10 கிலோ மீற்றருக்கு அப்பால் பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் 5,000 க்கும் அதிகமானவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டில் நோய்த் தொற்று உச்சம் பெற்றுள்ளது.

கடந்த புதனன்று 59,038 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்தது. பிரான்ஸில் இதுவரை 4.6 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 95,495 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தடுப்பூசி போடும் பணியும் திட்டமிடப்பட்டதைவிட மெதுவாக நடைபெறுகின்றது. கடந்த 3 மாதங்களில் வெறும் 12 வீதமான அளவு மக்களுக்கே அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதனால், பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக நாட்டைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற தமது இலக்கைக் கைவிடும் கட்டாயத்திற்குத் மெக்ரோன் தள்ளப்பட்டுள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதத்திற்காவது நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment