கடற்றொழில்சார் அபிவிருத்திக்காக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் (நாரா) மாபெரும் சேவையாற்றுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாரா நிறுவனத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு மட்டக்குளியிலுள்ள நாரா நிறுவனத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நாரா நிறுவனம் இத்துறையின் அபிவிருத்திக்காக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வாராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளின் பிரகாரம் கடற்றொழில்துறையை அபிவிருத்தியை நோக்கி நகர்த்தலாம் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்காக கடற்றொழில் துறை பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் நாராவில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இவ்வாறு அரசாங்கம் நியமனங்களை வழங்குவதன் நோக்கம், நாரா நிறுவனத்தின் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காகவே எனவும் தெரிவித்தார்.
எமது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இன்றைய தினம் புதிதாக நியமனங்களை பெற்றுக் கொள்பவர்கள் தமது கடமையை செவ்வனே செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment