(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு பெருமளவு செலவு ஏற்படுவதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் சபாநாயகர் அறிவிப்பு வேளையில் இதனை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட்டு வழங்க பெருமளவு செலவு ஏற்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்த வேண்டும்.
எனவே சபை உறுப்பினர்களின் மேசைகளில் அவர்கள் அறிக்கைகளை பெற விரும்பும் மொழி தொடர்பிலான விபரம் கோரும் படிவம் வைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் தாமதிக்காது அறிக்கைகளை எந்த மொழியில் தாம் பெற விரும்புகின்றோம் என்ற விபரத்தை பதிவு செய்து வழங்குமாறு கோருகின்றேன்.
இதன்மூலம் அறிக்கைகளை தேவையற்று மூன்று மொழிகளிலும் பெருமளவு அச்சிடுவதனை தவிர்த்து செலவுகளைக் குறைக்க முடியும் என்றார்.
இது குறித்து சபையில் உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததுடன், இறுவெட்டுகளில் தகவல்களை வழங்கும் செயற்பாடும் நிறுத்தப்படுமாயின் அதுவும் நல்லதொரு திட்டமாக அமையும், ஏனெனில் சூழலுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகின்றது.
எனவே அறிக்கைகளில் முடிந்தளவு இணைய வழிமுறை மூலமாக பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை முதன்மைப்படுத்தி செயற்பட கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment