பள்ளிவாசல்கள் பிற்போக்கான கருத்துக்களை சமூகத்தில் விதைத்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றன - பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

பள்ளிவாசல்கள் பிற்போக்கான கருத்துக்களை சமூகத்தில் விதைத்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றன - பிள்ளையான்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கலீபா ஆட்சியை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கிழக்கில் ஒரு சில இளைஞர் மத்தியில் உள்ளது எனவும் வெளிநாடுகளில் இயங்கும் அடிப்படைவாத அமைப்புகள் இலங்கையிலும் பெயர் மாற்றப்பட்டு இயங்கிக் கொண்டுள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டில் கடந்த காலத்தில் எமது இனத்துக்குள் ஏற்பட்ட அதிகார போராட்டம் பயங்கரவாதமாக மாற்றம் பெற்று பெரும் யுத்தத்திற்கும் நாம் முகங்கொடுத்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளும் இலங்கையை அழுத்தங்களுக்கு உட்படுத்தும் நிலையில் எமது நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் நடந்தால் நல்லதென்ற நிலையிலேயே நான் உள்ளேன்.

அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் குறித்த இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறு இருப்பினும் கடந்த நல்லாட்சி அரசாங்கமே இந்த தாக்குதல் நடத்த காரணமாகும்.

வெளிநாட்டு உந்துதல்கள், மத ரீதியிலான ஆக்கிரமிப்புகள் இலங்கையின் ஆட்சி சூழலை சரியாக பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மையாகும்.

எவ்வாறு இருப்பினும் இது மிக மோசமான தாக்குதலாகும். இவ்வாறு இன்னொரு சம்பவம் இடம்பெறக்கூடாது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கிய விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இன்று இஸ்லாத்தில் இருக்கும் வஹாப்வாத கொள்கையே பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது.

கலீபா ஆட்சியை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கிழக்கில் ஒரு சில இளைஞர் மத்தியில் உள்ளது. அதனை நிறுத்தி இந்த கூட்டத்தை சரியாக கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் இலக்கு வைக்கக்கூடாது. இன்று வெளிநாடுகளில் இயங்கும் அடிப்படைவாத அமைப்புகள் இலங்கையிலும் பெயர் மாற்றப்பட்டு இயங்கிக் கொண்டுள்ளது. எனவே இவற்றை சரியாக கையாண்டு நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எமது பகுதியில் உள்ள பிராந்திய பள்ளிவாசல்கள் கூட பிற்போக்கான கருத்துக்களை சமூகத்தில் விதைத்து குழப்பங்களை ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. எனவே மத ரீதியிலான முரண்பாடுகளை ஏற்படுத்தாத சூழல் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment