இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு அவசியமான வலுவான செயற்திட்டம் - முன்வைக்கவுள்ளார் ரணில் விக்கிரசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு அவசியமான வலுவான செயற்திட்டம் - முன்வைக்கவுள்ளார் ரணில் விக்கிரசிங்க

(எம்.மனோசித்ரா)

உலக மரபுரிமையான சிங்கராஜவனம், ஈரநிலங்கள் மற்றும் ஈரவலயக் காடுகள் உள்ளிட்ட இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு அவசியமான வலுவான சட்டதிட்டங்கள் உள்ளடங்கிய முழுமையான செயற்திட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க முன்வைக்கவுள்ளார்.

அதற்கமைய இலங்கை பரீட்சை திணைக்களத்ததைப் போன்று அரசியல் அல்லது வேறு எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியாத அதிகபடியான அதிகாரங்களையுடைய சுயாதீனமான திணைக்களமொன்றின் கீழ் இலங்கையிலுள்ள வனங்களை உள்ளடக்கும் வகையிலான வழிமுறையை கொள்கை ரீதியான தீர்மானமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கவுள்ளார்.

கொழும்பில் அவரது இல்லத்தில் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இதன்போது வனங்கள் மற்றும் ஏனைய இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு சூழலியலாளர்கள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு இவ்வாறானதொரு திணைக்களத்தை நிறுவுவதன் மூலம் அதிக அதிகாரங்கள் கிடைக்கப் பெறும். என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை பிரகடனத்தில் இந்த செயற்திட்டத்தை உள்ளடக்குவதோடு, சகல தொகுதிகளிலும் 5 - 10 ஏக்கர் நிலப்பரப்பில் சிறிய காடுகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து குறித்த திணைக்களத்தின் கீழ் அவற்றை நிர்வகிப்பதற்கான வேலைத்திட்டமும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment