ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி உரிமைகளை பெற்றக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதே ஜனாதிபதியின் நோக்கமாகும் என காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி கமகே தெரிவித்தார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மாநாட்டு மண்டபத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் வியாழனன்று 25.03.2021 இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“எமது காணி எமது உயிராகும்” எனும் கருத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் காணி விடயங்களைக் கையாளும் அரச உத்தியோகத்தர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வாக இது இடம்பெற்றது.
காணிப் பிரிவுக்குப் பொறுப்பான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கீர்த்தி கமகே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைவாக அரசாங்கத்தினால் சகல மக்களுக்கும் இன மத பேதமின்றி அவர்களுக்கான காணி தீர்வினை பெற்றுக்கொடுப்பதே இலக்காகும். அதற்கு அரச அதிகாரிகள் திறம்பட செயற்பட வேண்டும்” என்றார்.
நிகழ்வில் மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கை முதன்முதலில் கிழக்கு மாகாணத்தில் பணிபுரிவோருக்கு அரச காணி முகாமைத்துவ தமிழ் கைந்நூல் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் காணி விடயங்களைக் கையாளும்போது அரச அலுவலர்கள் பொதுமக்களுக்கு மகிழ்ச்சிகரமான செயற்பாட்டுத் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதோடு சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுத்தல் அரச அதிகாரிகள் அரசியல் அழுத்தமின்றி நேர்மையாக செயற்படல் தொடர்பாகவும் அரசாங்கத்தின் திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துதல் தொடர்பாகவும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் காணி விடயங்களைக் கையாளும் அதிகாரிகள் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment