இஸ்லாமிய, கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதத்தினால் பௌத்த சமூதாயத்தின் இருப்பு கேள்விக்குறி - சுதந்திர சதுக்கத்தில் நாளை சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஞானசார தேரர் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

இஸ்லாமிய, கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதத்தினால் பௌத்த சமூதாயத்தின் இருப்பு கேள்விக்குறி - சுதந்திர சதுக்கத்தில் நாளை சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஞானசார தேரர் அழைப்பு

(இராஜதுரை ஹஷான்)

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினாலும், கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதத்தினாலும் பௌத்த சமூதாயத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு மகாநாயக்கதேரர்களுக்கு உண்டு. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபலசேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளை வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம். இதற்கு மகாநாயக்க தேரர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அஸ்கிரிய பீடத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. என்ற தவறான நிலைப்பாட்டை ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை தோற்றுவித்துள்ளது. இது தவறான செயற்பாடு என்பதை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். பௌத்த உரிமைகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என அஸ்கிரிய பீட அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர் ஞானசார தேரரிடம் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் கண்டி - அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரருடன் பொதுபலசேனா அமைப்பினர் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தார்கள்.

இச்சந்திப்பின்போது ஞானசார தேரர் குறிப்பிட்டதாவது, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நாட்டில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தன்மையை வெளிப்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதம் குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் முற்றாக அழியவடையவில்லை. என்பதை குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளிப்படுத்தியது. முழுமையற்ற அறிக்கை தற்போது அரசியல் மற்றும் சமூக களத்தின் பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது.

நாட்டில் வலுப்பெற்று வந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து பலமுறை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து பேசும் தருணத்தில் நாங்கள் இனவாதிகளாக அரசியல் தலைவர்களினால் சித்தரிக்கப்பட்டு துரதிஷ்ட வசமாக ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. குண்டுத் தாக்குதலின் உண்மை காரணிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வித புதிய காரணிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறைகளும் குறிப்பிடப்படவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நானும் (ஞானசார தேரர்) பொதுபலசேனா அமைப்பினரும், ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகளும் குண்டுத் தாக்குதலின் பொறுப்புதாரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளோம்.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டிய தேவை பொதுபலசேனா அமைப்பிற்கு கிடையாது. பௌத்த மதத்திற்கும், பௌத்த சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படும்போது அதற்கு எதிராக செயற்பட்டுள்ளோம். இதனை இனவாதம் என்று குறிப்பிட முடியாது. பௌத்த மதத்தின் உரிமைகளை பாதுகாப்பது காவி உடை தரித்த தேரர்களின் தலையாய கடமையாகும்.

இஸ்லாமிய அடிப்படைவாதமும், கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதமும் பௌத்த மதத்திற்கும், பௌத்த சமூகத்திற்கும் பாரிய நெருக்கடியாகவே காணப்படுகிறது. இவ்விடயம் குறித்து அரசியல்வாதிகள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.

பௌத்த சமூகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது மகாநாயக்க தேரர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். விசாரணை அறிக்கையினால் பௌத்த அமைப்புகளுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பௌத்த அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த மதத் தலைவர்களை ஒன்றிணைத்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இதற்கு மகாநாயக்க தேரர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என்றார.

அஸ்கிரிய பீட அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என்பதை அரசாங்கத்திற்கு உத்தியோகப்பூர்வமாக செயற்பட வேண்டும். பௌத்த மத உரிமைகளையும், பௌத்த அமைப்புக்களையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைத்து செயற்படுவது அவசியமாகும்.

பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது என்ற தவறான நிலைப்பாட்டை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. தவறை திருத்திக் கொண்டு குண்டுத் தாக்குதலின் உண்மை காரணியை வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment