(செ.தேன்மொழி)
சீனி இறக்குமதியின் போது இடம்பெற்ற மோசடியால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 15.9 மில்லியன் ரூபா இலாபம் அற்றுப்போயுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைச்சர் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் எமது அரசாங்கத்தின் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த மோசடியை 'பட்டப்பகலில் இடம்பெற்ற பெரும் கொள்ளை' என்று தெரிவித்து நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்தார்கள். எனினும் அரசாங்கம் துரிதமாக அது தொடர்பில் நடவடிக்கை எடுத்ததுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 12 மில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கியில் தடுத்து வைக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் சீனி இறக்குமதியின் போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த மோசடியின் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 15.9 மில்லியன் ரூபாய் இலாபம் கிடைக்கப் பெறாமல் போயுள்ளது. இந்த இலாபத்தை தம்வசப்படுத்திக் கொண்டவர்களை இனங்கண்டு, அவர்களிடமிருந்து அதனை மீள பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா?
அவ்வாறெனில் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டுள்ளதா? அல்லது அதில் ஒரு தொகுதி ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்களா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கான பதிலை வர்த்தக அமைச்சரும், அரசாங்கமுமே தெரிவிக்க வேண்டும்.
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதனை மேலும் பரவலடையச் செய்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஒரு நிலைப்பாட்டையும், கொவிட் தடுப்புக்கான அமைச்சர் இன்னுமொரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளதுடன், அதிகாரிகள் வேறு வகையான நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றனர்.
முதற்கட்ட தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கான இரண்டாவது கட்டத்திற்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எதிர்வரும் ஜூன் ஆரம்பத்தில் 1.6 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க முடியும் என்கின்றனர். அதற்காக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர் ?
69 இலட்சம் மக்களையும் ஏமாற்றி ஆட்சி அமைத்துக் கொண்டவர்கள், தொடர்ந்தும் அம்மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றார்கள். 69 இலட்சம் மக்களின் முடிவின் விளைவுகளை இன்று முழு நாடும் எதிர்நோக்கி வருகின்றது.
மக்கள் தொடர்பில் சிந்திக்காமல் நாட்டின் தலைவர் 'கிராமத்துடன் உரையாடல்' எனும் போர்வையில் கிராமங்கள் தோரும் செல்வதுடன் மாத்திரமின்றி நாட்டில் உள்ள வனாங்களையும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment