யாழில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல் - தவிசாளர் தலையீட்டில் தடுத்து நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

யாழில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல் - தவிசாளர் தலையீட்டில் தடுத்து நிறுத்தம்

யாழ்ப்பாணம், புத்தூர் - நிலாவரை கிணற்றடியில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சித்த அகழ்வுப் பணியை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.

இன்று வெள்ளிக்கிழமை (26) காலை நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நளின் வீரரத்தின தலைமையிலான குழுவினர் நிலாவரையில் துப்புரவு செய்வதாக தெரிவித்து வருகை தந்தனர்.

சந்தேகத்தில் தவிசாளர் உள்ளிட்டவர்களும் குறித்த முயற்சியினை அவதானித்து கொண்டு நின்றனர். இதனை புலனாய்வாளர்களும் புகைப்படம் எடுத்த வண்ணமிருந்தனர்.

தொல்லியல் திணைக்களத்தினர் அத்திபாரம் போன்று நிலத்தினை வெட்டுவதற்கு ஆரம்பித்தவுடன் தவிசாளர் வளாகத்தினுள் சென்று என்ன நடக்கின்றது என தொல்லியல் திணைக்கள அதிகாரியினை கேட்க முயற்சித்தபோது, ஒருவர் தவிசாளரை விசாரிக்க முற்பட்டார்.

தவிசாளர் இராணுவம் உமக்கு என்ன வேலை இங்கு என குறித்த இராணுவ அதிகாரியைக் கேட்க தாம் மேலிடத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும் என்றார்.

இராணுவ வழிகாட்டலுடன் இங்கு என்ன நடக்கின்றது என உரத்த தொனியில் தவிசாளர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளைக் கேட்டபோது, அவர்கள் இது அரச காரியம் நடக்கின்றது. அரசியல் செய்யாதீர்கள் எனப்பதிலளித்து தாம் பிரதேச செயலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

பிரதேச செயலகத்திடம் வினவப்பட்டபோது அங்கு எவ்வித அனுமதிகளும் பெறப்பட்டிருக்கவில்லை. எனவே உடனடியாக வேலைகளை நிறுத்துமாறும் தவிசாளர் தெரிவித்தார்.

அவர், ஏற்கனவே தொல்லியல் திணைக்களம், நல்லிணக்கத்திற்கும் இன முரண்பாடுகளுக்கும் அடித்தளமிடுவதனால் மக்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளமையால் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெற்று வெளிப்படைத்தன்மை உடையதாக வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என தான் கடந்த குழுக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்திருக்கின்றேன். அதற்கு முரணாக நீங்கள் செயற்பட முடியாது என்றார் தவிசாளர்.

அதற்கு தாம் உங்களுக்கு எல்லாம் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை என தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பதிலளித்த நிலையில், பெருமளவு இளைஞர்களும் பொதுமக்களும் குறித்த வளாகத்திற்குள் நுழைந்தனர்.

தவிசாளர் இங்கு ஏற்படும் அமைதியின்மைக்கு தொல்லியல் திணைக்களத்தினதும், இராணுவத்தினதும் செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அவ்விடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார், தவிசாளரிடம் இளைஞர்களை வெளியே போகக்கூறுமாறு கேட்டபோது வேலைகள் நிறுத்தப்பட்டு உபகரணங்களுடன் தொல்லியல் திணைக்களத்தினர் வெளியேறினால் மக்கள் உடன் வெளியேறுவர்.

இழுபறிகளுக்குப் பின் தவிசாளரையும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளரையும் பொலிஸ் நிலையம் வருமாறு தெரிவிக்கப்பட்டது. வேலைகள் நிறுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன் தவிசாளர் பொலிஸ் நிலையம் வருவதற்கு உடன்பட்டார்.

இதன் பின்னரும் தொல்லியல் திணைக்களத்தினர் தாம் வெளியே போகும் போது தமக்குப் பாதுகாப்பில்லை என்றனர். தவிசாளர் பொலிசார் ஆயுதத்துடன் நிற்கையில் உங்களை பாதுகாக்க முடியாதா? நான் பாதுகாப்பாக உங்களை பிரதேச சபைக்குக் கொண்டு செல்கின்றேன். நீங்கள் வெளியேறாவிட்டால் எம்மால் போக முடியாது என்றார்.

தொடர்ந்து வாகன வசதி உடன் இல்லை என்றபோது தவிசாளர் தனது பிக்கப்பில் நீங்கள் பதுகாப்பாக போய்ச்சேர ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்து தவிசாளரின் பிக்கப்பில் தொல்லியல் திணைக்களத்தின் உபரணங்கள் ஏற்றப்பட்டு அவர்களின் கோரிக்கைக்கு அமைய கோட்டையில் விடப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸ் முறைப்பாட்டினை அணுகுவதற்காக அனைவரையும் வெளியேற்றிவிட்டு நிலாவரை கிணற்று வளாகக் கதவை மூடிவிட்டு தவிசாளர் வெளியேறினார்.

கேசரி

No comments:

Post a Comment