குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான துப்பாக்கி வழக்கில் பொய் சாட்சியத்தை உருவாக்கியமையினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பிரதம நீதவான் மஞ்சுல கருணாரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டரான மோஹன மெண்டிஸ் மற்றும் ஓய்வு பெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டரான நவரத்ன பிரேமதிலக்க ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று சந்தேகநபர்களையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் மன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, வௌிநாட்டிற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டரான நிஷாந்த டி சில்வா தொடர்பில் நீதிமன்றத்தில் எவ்வித விடயங்களும் அறிக்கையிடப்படவில்லை.
வழக்கின் நான்காவது சந்தேகநபரான விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நவரத்ன பிரேமதிலக்கவிடம், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ஐந்து தடவைகள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், முறைப்பாட்டை வழிநடத்தும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment