(செ.தேன்மொழி)
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ரஷ்ய மொழி பாடத்திற்கான பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய இம்முறை இவ்வாறு ஆள் மாறாட்டம் செய்ததாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்ததாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமையுடன் சாதாரண தரப் பரீட்டைகள் நிறைவு பெற்றுள்ளதுடன், அன்றையதினம் இடம்பெற்ற ரஷ்ய மொழி பாடத்திற்கான பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்யததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பரீட்சை நிலையமொன்றில் இளைஞர் ஒருவர் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சையில் தோற்றுவதற்கு வந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நண்பனுக்காக பரீட்சை எழுத முன்னின்றமை தொடர்பில் இவ்வாறு 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இம்முறை பரீட்சையின் போது இவ்வாறு ஆள் மாறாட்டம் செய்ததாக ஏற்கனவே முல்லைத்தீவு, வலஸ்முல்ல மற்றும் இபலோகம ஆகிய பகுதிகளிலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் பரீட்சை சார்ந்த சட்ட விதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment