(இராஜதுரை ஹஷான்)
இலங்கை போக்குவரத்து சபையில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடும் 5 வருடத்துக்கு மேற்பட்ட தொழிற்துறை அனுபவமுடைய சேவையாளர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாரதி ஆலோசனை பதவிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து துறை நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்திலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் உள்ள உப டிப்போக்களை பஸ் தரிப்பிடமாக மாத்திரம் பயன்படுத்தவும் அது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் பிரதான டிப்போ மூலம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதன் ஊடாக நாடு பூராகவும் முறையானதும் சிறந்த சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகர போக்குவரத்தை கையாள்வது தொடர்பான முடிவுகளை எடுக்க மாகாண போக்குவரத்து குழுக் கூட்டங்களில் போக்குவரத்து அமைச்சின் பிரிதிநிதியை கலந்துகொள்ளச் செய்வதன் முக்கியதுவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நகர போக்குவரத்தை கையாள்வது குறித்து முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் போது போக்கவரத்து அமைச்சை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கும் போது சில மோசடிகளைத் தடுக்க முடியும் .
அரச போக்குவரத்து சேவையில் சாரதி மற்றும் நடத்துனரின் வெற்றிடத்துக்காக குறைந்த வருமானம் பெறுபவர்களை தெரிவு செய்து தகுதியானவர்களை விரைவில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களில் காணப்படும் அதி நவீன தொழிநுட்பம் குறித்து சாரதிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஆலோசனை செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து சாரதிகளுக்கு போதிய தெளிவின்மை காரணமாக நவீன வாகனங்களின் தன்மை விரைவில் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணையவழி ஊடாக புகையிரத பயண அனுமதிச் சீட்டுகளை பதிவு செய்யும் போது ஏற்படும் அசௌகரியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் பணித்துள்ளார்.
மேலும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைத்துக் கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்று உருவாக்குவதின் தேவை குறித்து இங்கு கலற்துரையாடப்பட்டது.
பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகளுக்காக விசேட சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளியிடுவது குறித்தும் அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.
No comments:
Post a Comment