விமல் வீரவன்ச தவறை திருத்திக் கொள்வதை விடுத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக எமக்கு சேறுபூசுவது பயனற்றது : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

விமல் வீரவன்ச தவறை திருத்திக் கொள்வதை விடுத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக எமக்கு சேறுபூசுவது பயனற்றது : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணியில் இருந்து கொண்டு அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்ட கருத்து வெறுக்கத்தக்கது. தவறை திருத்திக் கொள்வதை விடுத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக எமக்கு சேறுபூசுவது பயனற்றது. விமல் வீரவன்ச நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நான் குறிப்பிட்டதை கட்சி தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட உயர்மட்ட தலைவர்கள் எவரும் இதுவரை நிராகரிக்கவில்லை. அமைச்சர் விமல் வீரவன்சவின் குறுகிய நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்ட கருத்தினை கடுமையாக எதிர்க்கிறோம். கட்சியின் தலைமைத்துவம் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. 

கூட்டணியில் இருந்து கொண்டு செய்த தவறை சுட்டிக்காட்டினோம். தவறை திருத்திக் கொண்டு மன்னிப்பு கோருவது பெருந்தன்மையான செயற்பாடாகும். தவறுக்கு மன்னிப்பு கோருவதை விடுத்து சமூகவலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற காரணிகளை குறிப்பிட்டு எமக்கு சேறு பூசுகிறார். இதனால் எவ்வித மாற்றமும் ஏற்படாது. 

குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை என்பதை தெளிவாக அவருக்கு குறிப்பிட்டுள்ளோம். கூட்டணி என்றால் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

கட்சி தலைவர் கூட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அமைச்சர் விமல் வீரவன்ச அவரது இல்லத்தில் இரண்டு முறை கட்சி தலைவர்களை வரவழைத்து பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளார். 

கட்சி தலைவர் கூட்டம் இரகசியமான முறையில் அமைச்சரின் இல்லத்தில் வழமையாக இடம்பெறுவதில்லை. அக்கூட்டத்தில் கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை. வேறுப்பட்ட தரப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆகவே அமைச்சர் விமல் வீரவன்சவின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்றார்.

No comments:

Post a Comment