எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் குழாய் கிணறு அமைக்கும் வேலைத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு மீளாய்வு கூட்டம் அலுவலகத்தில் இடம்பெற்ற போது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு தாக்கமானது வீட்டு வளாகத்தினுள் பாவனைக்கு உதவாத வகையில் குழாய் கிணறு அதிகம் காணப்படுவதால் இதில் டெங்கு குடம்பிகள் அதிகம் காணப்படுகின்றது.
இதனால் குழாய் கிணறு அமைக்கும் வேலைத் திட்டங்கள் நிறுத்தப்படுவதுடன், பாவனைக்கு உதவாத குழாய் கிணறுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பரீட்சை மண்டபம் மற்றும் வளாகத்தினுள் டெங்கு புகை விசுறுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை வைத்திய அதிகாரி அலுவலக மேற்கொள்ளும் என்றும், பரீட்சைக்கு வருகை தருவோர் கொரோனா பாதுகாப்பு கருதி சுகாதார திணைக்களத்தின் விதிமுறைகளை பின்பற்றி வருகை தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினால் வழங்கப்படும் விதிமுறைகளை பேணாது டெங்கு தாக்கத்தினை அதிகரிப்பவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வழங்கு தாக்கல் இடம்பெற்று வருவதாகவும், வைத்திய அதிகாரி அலுவலகம் தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச பாடசாலை அதிபர்கள், பள்ளிவாயல் பிரதிநிதிகள், கிராம சேவை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment