பொலிஸாரின் தடைகளைத்தாண்டி பொத்துவிலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டப் பேரணியில் முஸ்லிம் பிரதிநிதிகளும் பூரண ஆதரவு வழங்கி காரைதீவில் இணைந்து கொண்டனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்டப் பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளைத்தாண்டி அம்பாறை - பொத்துவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஆலையடிவேம்பில் இருந்து அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கிச் சென்றபோது அதற்கு ஆதரவாக பெருமளவான முஸ்லிம்கள் இணைந்து கொண்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் சட்டத்தரணி அன்ஸீல் ஆகியோர் இணைந்தனர்.
வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கெதிரான அடக்கு முறைகளைக் கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்டம் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றைக் கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்றத்தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா? என்பது தொடர்பில் பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இத்தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமலாக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்கு முறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றைக் கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது.
போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் திடீர் வீதித் தடை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வீதித் தடையை கடப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பெருந்திரளான மக்கள் இந்தப் போராட்டப் பேரணியில் கலந்து கொண்டுள்ளமையால் வீதிப் போக்கு வரத்தும் சிறிது தாமதமாவதுடன் பொலிசார் இந்த வீதிப் போக்கு வரத்தினைச் சீர்செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment