ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை வெற்றிடமாக்குவது தொடர்பான பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், கடந்த வெள்ளிக்கிழமை (05) வழங்கப்பட்ட தடையுத்தரவுக்கு அமைய, நாளை (12) வரை குறித்த தடையுத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
ரஞ்சன் ராமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்றையதினம் (11) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், அர்ஜுன ஒபேசேகர, மாயாதுன்ன கொரேயா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, சட்ட மாஅதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது எம்.பி. பதவியை வெற்றிடமாவது தொடர்பில் தேர்தல்கள் செயலத்திற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பதை தடுக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவே இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள செய்யுமாறு நேற்றையதினம் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment