(செ.தேன்மொழி)
காதலர் தினத்தை முன்னிட்டு இணையவழி மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் இளைஞர் மற்றும் யுவதிகள் இது தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, காதலர் தினத்தை முன்னிட்டு இணைய வழியூடான மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. இளைஞர் அல்லது யுவதிகளை இலக்கு வைத்து, காதலர் தினம் காரணமாக தங்களுக்கு பரிசு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்காக சிறியதொரு பணத் தொகையை வைப்பிலிடுமாறு கூறி மோசடிக்காரர்கள் குறுந்தகவல்களை அனுப்பி இத்தகைய மோசடிகளை செய்யலாம்.
இதன்போது இணையத்தினுடாக பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளும் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும். மோசடிக்காரர்கள் இணைய வழி கணக்குகளுக்கு அத்துமீறி நுழைந்து பணத்தை மோசடி செய்வதற்கான வாய்ப்புள்ளது.
அத்தோடு, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக நடாத்தப்படும் விருந்துபசாரங்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன்போது இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் மட்டுமன்றி அதில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் .
No comments:
Post a Comment