பொத்துவில் - பொலிகண்டி எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

பொத்துவில் - பொலிகண்டி எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, இந்த ‘பி’ அறிக்கைகள் பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றக் கட்டளைச் சட்டம் 55 (1), 56 2 (ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த பி அறிக்கைகளை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தனித்தனியே தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு இன்று (09.02.2021) மன்றில் எடுக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி மே மாதம் 23, 25 ஆம் திகதிகளுக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று B அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment