(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமையில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய இந்த விவகாரத்தில் தீர்மானத்தை எடுக்குமாறுதான் நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தினோம் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. இவ்விடயத்தில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய தீர்மானங்களை எடுக்குமாறு நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம். இது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய விடயமல்ல. எனவே அவர்களால் இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாது.
எவ்வாறிருப்பினும் தற்போது இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துள்ளது. எனினும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை வழிகாட்டல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
No comments:
Post a Comment