(எம்.மனோசித்ரா)
இலங்கையில் பாரதூரமான பிரிவினைவாத யுத்தம் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்களை கொல்வதற்கு முயற்சிக்கப்பட்டதோடு, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை இல்லாதொழித்த பாதுகாப்பு துறையினரை சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுமானால் அதனை நாம் எதிர்ப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் பாரதூரமான பிரிவினை வாத யுத்தம் நடைபெற்றது. பல தலைவர்களை கொல்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதோடு சிலர் கொல்லப்பட்டனர்.
எனவே இவ்வாறான அடிப்படைவாதிகளை அழிப்பதற்கு பாதுகாப்பு துறையினர் முன்னெடுத்த முயற்சிகளை குற்றங்களாகக் குறிப்பிட்டு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
ஆனால் ஏதேனுமொரு நபர் தனிப்பட்ட ரீதியில் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால் அவர் எந்த நிலையிலிருந்தாலும் அது குறித்து உள்நாட்டு நீதித்துறை நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அரசாங்கம் மாத்திரமல்ல. நாமும் இவ்வாறான சர்வதேச விசாரணைகளை எதிர்க்கின்றோம்.
பிரபாகரனை தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் தலைவர், அதன் அங்கத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்ற நிலையில், சிறு சிறு குற்றங்களால் விடுதலை புலிகள் அமைப்பிலுள்ள சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எந்தளவிற்கு அறிவுபூர்வமானது என்பது தெளிவாகிறது.
எனவே 12 வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்த யுத்தத்தை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்காமல் அனைத்தையும் மறந்து சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment