மியான்மாரில் இராணுவப் புரட்சியை அடுத்து வெடித்தது மக்கள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

மியான்மாரில் இராணுவப் புரட்சியை அடுத்து வெடித்தது மக்கள் போராட்டம்

ராணுவ ஆட்சியை நீக்க வலியுறுத்தியும் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் யாங்கோனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மாரில் நடந்த பொதுத் தேர்தலில், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டிய ராணுவம், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மார் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. 

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. 

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. 

போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராணுவ ஆட்சியை கண்டித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியை விடுவிக்க வலியுறுத்தியும் யாங்கோனில் இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்தை கண்டித்து ஊர்வலமாக சென்றனர். 

ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் வீதிக்கு வந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்ததால் பதற்றம் உருவானது. 

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர், சூகியின் கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சியின் நிறமான சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்திருந்தனர். 

சாலையில் அமர்ந்து ராணுவத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். போராட்டக்கார்களுக்கு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உணவு மற்றும் தண்ணீரை வழங்கினர். 

போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பிற்பகலில் கலைந்து சென்றனர். இதனால் போராட்டத்தின் வலு குறையத் தொடங்கியது. எனவே, போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி மக்களுக்கு தொடர்ந்து ஆர்வலர்கள் அழைப்பு விடுத்தனர். 

இதனால் இணையத்தளம் ஸ்தம்பித்தது. பின்னர் சிறிது நேரத்தில் இணையத்தளம் முற்றிலும் முடக்கப்பட்டது. போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இணையத்தளத்தை ராணுவம் முடக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுபற்றி ராணுவம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

வரும் நாட்களில் ஆங் சான் சூகியின் ஆதரவாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment