பயங்கரவாதத்தை அடக்கும் மனிதாபிமானத்தின் போது மனித உரிமை மீறல் இடம்பெற்றிருப்பின் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்படும் - உள்ளகப் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பின்படியே தீர்வு என்கிறார் அமைச்சர் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

பயங்கரவாதத்தை அடக்கும் மனிதாபிமானத்தின் போது மனித உரிமை மீறல் இடம்பெற்றிருப்பின் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்படும் - உள்ளகப் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பின்படியே தீர்வு என்கிறார் அமைச்சர் தினேஷ்

வடக்கு, கிழக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் செயல்படுவோமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமது நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பின்படி தீர்வுகள் உள்ளன. அதன் பிரகாரம் இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பின்படியே தீர்வுகாணப்பட வேண்டுமென்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 30/1 கீழ் தீர்மானத்துக்கு எமது நாட்டின் அரசியலமைப்பை மீறி நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தாலும் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இலங்கை அரசியலமைப்பில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை.

கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது 30/1 கீழ் தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் செயல்படுவோமென்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment