(இராஜதுரை ஹஷான்)
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ள முடியும். முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளையும் செயற்படுத்த முடியாது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கொண்டு தனியார் பேருந்து சங்கத்தினர் ஆரம்பத்தில் இருந்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அரச பேருந்துகள் மேலதிகமான போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். கொழும்பு நகருக்குள் அரச பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கடந்த காலங்களில் முன்வைத்த கோரிக்கைககளில் இயலுமானவற்றை நிறைவேற்றியுள்ளோம். அதற்கு மேலதிகமாக நிவாரணங்களும் போக்குவரத்து சபை ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நிவாரணங்களையும் பெற்றுக் கொண்டு ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுவது தவறான செயற்பாடாகும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மாத்திரமல்ல நாட்டில் உள்ள அனைத்து சேவைத்துறைகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. ஆகவே இயலுமான சலுகைகளை மாத்திரம் வழங்குவோம். போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் தரம் தொடர்பில் ஆராய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். அதனை விடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் அரசாங்கத்துக்கும், பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
சீன நாட்டு தயாரிப்புக்களிலான புகையிரத பெட்டிகளை புகையிரத போக்குவரத்து சேவையில் இணைத்துக் கொள்வதற்கு புகையிரத சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment