பொலிஸ் ஜீப் முச்சக்கர வண்டியில் மோதியதில் தாய், மகன் பலி - மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

பொலிஸ் ஜீப் முச்சக்கர வண்டியில் மோதியதில் தாய், மகன் பலி - மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம்

பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று, முச்சக்கர வண்டியில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (28) முற்பகல் 8.00 மணியளவில், வாரியபொல, கட்டுபொத்த வீதியில் 10ஆவது மைல் கல் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி (40), அவரது தாயார் (69) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதியின் மனைவி (34), 9 மற்றும் 13 வயதுடைய அவர்களின் இரண்டு மகள்கள் மற்றும் பொலிஸ் ஜீப் வண்டியின் சாரதி ஆகியோரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் காயமடைந்த மூவரும் குருணாகல் வைத்தியசாலையிலும், பொலிஸ் ஜீப் வண்டியின் சாரதி கட்டுபொத்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவுவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கட்டுபொத்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துவிட்டு திரும்பிய நிலையிலேயே இவ்வாறு விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாகவும், ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அஜித் ரோஹண தெரிவித்தார்.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள், வியாங்கொடையில் இருந்து அநுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment