இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டது. இதனால், இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீண்டும் கடுமையாக பின்பற்றுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment