நாடளாவிய ரீதியில் 40,500 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 21 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் 40 ஆயிரத்து 500 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு இலட்சத்து 21 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்படுவதாக தெரியவந்ததையடுத்து அவர்களை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது சுய தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக அடையாளம் காணப்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை பின்பற்றாத அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதனால் இவ்வாறான நிறுவனங்களின் நிர்வாகப் பிரிவினர் இது தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும்.
இதேவேளை, முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,981 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களுள் 2,600 பேருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் எந்த பகுதிகளில் வசிப்பவர்களாயினும் வீட்டை விட்டு வெளியேறும் போது முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாகும் என்றார்.
No comments:
Post a Comment