பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 23 முதல் 25 ஆம் திகதி வரை 3 நாட்கள் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்று (18) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 23 ஆம் திகதி, கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட, இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதி குறித்த விவாதம் மு.ப. 11.30 முதல் பி.ப. 1.00 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
அன்றையதினம் மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் அதேவேளை, மு.ப. 10.00 மணிமுதல் 11.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாவுக்கான நேரம் ஒதுக்கப்படவுள்ளது.
இதேவேளை, பெப்ரவரி 24 ஆம் திகதி பாராளுமன்றம் மு.ப. 10.00 மணிமுதல் மு.ப. 11.30 மணி வரை இடம்பெறுவதுடன், அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு மாத்திரம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 25 ஆம் திகதி மு.ப. 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை முன்னாள் சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டார அவர்களின் மறைவு தொடர்பான அனுதாபப் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
அன்றையதினம் முற்பகல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாவுக்கான நேரம் ஒதுக்கப்படாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அளகப்பெரும, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, கயந்த கருணாதிலக்க, டிலான் பெரேரா, ரிஷாட் பதியுதீன், ரஞ்சித் மத்துமபண்டார, மனோ கணேசன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment