(செ.தேன்மொழி)
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 1,200 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகளுக்கமைய, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு புறம்பாக செயற்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
அதற்கமைய, நேற்று இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது 645 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 608 நிறுவனங்கள் முறையான சட்டவிதிகளை கடைப்பிடித்திருந்ததுடன், 34 நிறுவனங்கள் சட்ட விதிகளை பின்பற்றியிருக்க வில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் இதுவரையில் , 11,565 நிறுவனங்கள் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது 10,214 நிறுவனங்கள் முறையான சட்ட விதிகளை கடைப்பிடித்திருந்ததுடன், அவற்றுள் 1,351 நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்நிறுவனங்களில் 1,200 நிறுவனங்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்டத்திற்கமைய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment